இன்று சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்.. விரைவில் முக்கிய அறிவிப்பு? பரபரக்கும் டெல்லி
டெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காங். கட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குலாம் நபி ஆசாத் இன்று சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியவில்லை.
அதேபோல உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ஓராண்டிற்கு மேலாகப் பிரசாரம் செய்த போதிலும், அங்கு வெறும் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது.
நான் அப்போதே எச்சரித்தேன்.. கேட்கவில்லை.. பிரியங்கா காந்தியை மறைமுகமாக விமர்சித்த ப.சிதம்பரம்?
காங். செயற்குழு கூட்டம்
இந்தத் தேர்தல் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த கேள்விகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது. இதற்கிடையே கடந்த 13ஆம் தேதி டெல்லி காங். அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தல் தோல்விகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அப்போது ராகுல், பிரியங்கா உட்பட மூவரும் பதவி விலகத் தயாராக இருப்பதாகச் சோனியா காந்தி அறிவித்தார். இருப்பினும், செயற்குழு உறுப்பினர்கள் அதைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்துள்ளனர்.
தலைவர்கள்
அதேநேரம் மறுபுறம் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அதிருப்தி தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி-23 தலைவர்களின் குழு நேற்று மாலை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டது. 24 மணி நேரத்தில் ஜி 23 தலைவர்கள் 2ஆவது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக கபில் சிபல், ஆனந்த், பூபிந்தர் ஹூடா ஆகியோர் குலாம் நபி ஆசாத் வீட்டில் முகாமிட்டுள்ளனர்.
சோனியா காந்தி - குலாம் நபி ஆசாத் சந்திப்பு?
இந்நிலையில், அதிருப்தி தலைவர்களில் முக்கியமானவராக அறியப்படும் குலாம் நபி ஆசாத் இன்று சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் தலைமை தொடங்கி முழுமையாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி
முன்னதாக நேற்று மதியம் தான் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் ஹூடா, ராகுல் காந்தியைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் கட்சியில் யார் முக்கிய முடிவுகளை எடுப்பது என்பது எனத் தெரியவில்லை என்றும் பல நேரங்களில் முக்கிய முடிவுகளைக் கூட செய்தித்தாள்கள் வாயிலாகவே தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதாகவும் பூபிந்தர் ஹூடா தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தலைவர்களிடமும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் பூபிந்தர் ஹூடா வலியுறுத்தி உள்ளார்.