பசியால் யாரும் பாதிக்கப்பட கூடாது.. இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க.. மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: லாக்டவுனால் பசியால் யாரும் பாதிக்கப்படக் கூடாது, 6 மாதங்களுக்கு தலா 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
அன்புள்ள பிரதமரே, இந்த கடிதம் உங்களை வந்தடையும், என்று நம்புகிறேன். லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீண்டகால உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
தொற்றுநோய் போன்ற இடர்பாடு காலங்களின்போது, தேவைகளை பூர்த்தி செய்ய, உணவு தானியங்களின் இருப்பு உள்ளபோதிலும், துன்பகர சூழல்நிலவுகிறது.
2020ம் ஆண்டு, ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் வழங்கப்படுவதை காட்டிலும் கூடுதலாக 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன். இருப்பினும், லாக்டவுனின் மோசமான தாக்கத்தையும், மக்களின் நீண்டகால தேவையையும் கருத்தில் கொண்டு வாழ்வாதாரங்களை காப்பாற்ற, சில பரிந்துரைகளை பரிசீலிக்க நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
முதலாவதாக, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு, ஒரு நபருக்கு, தலா, 10 கிலோ தானியங்கள் வழங்குவது கூடுதலாக 3 மாதங்களுக்கு, அதாவது, 2020ம் ஆண்டு, செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
இந்த பயனாளிகள் எதிர்கொள்ளும் நீண்டகால பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உணவு உரிமைகளை இலவசமாக வழங்கலாம்.
இரண்டாவதாக, உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும், ஆனால் ரேஷன் கார்டுகளை வைத்திருக்காதவர்களுக்கு, 10 கிலோ உணவு தானியங்கள், 6 மாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்படலாம்.
தற்போதைய நெருக்கடி, பல குடும்பங்களை உணவு பாதுகாப்பின்மை மற்றும் வறுமைக்கு தள்ளியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தின் உரிமையையும் தீர்மானிக்க 2011 முதல் மக்கள் தொகை அதிகரிப்பு கருத்தில் எடுக்கப்படவில்லை.
உணவு பணவீக்கத்திற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க மேற்கண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவை, ஒரு கட்டத்தில் விநியோகச் சங்கிலி இடையூறுகள் விலை உயர்வை ஏற்படுத்துகின்றன. மேலும், மேலே பரிந்துரைக்கப்பட்டபடி மாநிலங்களுக்கு உணவு தானியங்களை வெளியிடுவதால், கோதுமை மற்றும் அரிசி ரபி பருவத்தில், உணவு தானியங்களை கொள்முதல் செய்வதை அதிகரிக்க இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் (எஃப்.சி.ஐ) சேமிப்பு இடத்தை உருவாக்க உதவும்.
தொற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டத்தில், யாரும் பசியால் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.