இன்குலாப் ஜிந்தாபாத் முழங்கிய ஸ்வாதி மாலிவால்! செல்லாது செல்லாது! மீண்டும் பதவியேற்க சொன்ன சபாநாயகர்
டெல்லி: மாநிலங்களவை எம்பியான ஸ்வாதி மாலிவால், பதவி பிரமாணத்தை வாசிக்கும்போது 'இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கமிட்டதால், மீண்டும் பதவி பிரமாணத்தை வாசிக்க வேண்டும் என சபாநாயகர் கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மியை சேர்ந்த ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடைக்கால பட்டஜெட் தாக்கலுக்கு முன்னதாக நேற்று அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த சம்பவத்தின் போது மாநிலங்களவையில் சலசலப்பு எழுந்தது. காரணம் அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டபோது 'இன்குலாப் ஜிந்தாபாத்' அதாவது 'புரட்சி ஓங்குக' என்று எழுப்பிய முழக்கம்தான். இதனால் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாலிவால் மீண்டும் பதவி பிரமாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு அவரை இருக்கைக்கு அனுப்பிவிட்டார்.

மட்டுமல்லாது ஸ்வாதி மாலிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினருக்கான சத்தியப்பிரமாணத்தை வாசிப்பதற்கு பதில், "ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட ஸ்வாதி மாலிவாலாகிய நான்" என நியமன எம்பிக்களின் சத்தியப்பிரமாணத்தை வாசித்திருந்தார். எனவே மாலிவால் இரண்டாவது முறையாக பதவியேற்க இதுவும் முக்கிய காரணமாகும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மாலிவாலை அழைத்த தன்கர், "இரண்டாவது முறையாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளும் போது, என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே படிக்க வேண்டும். இதில் எந்த கூடுதல் வாசகங்களும் அனுமதிக்கப்படாது. இது ஒரு புனிதமான தருணம்" என்று கூறி பதவியேற்க சொன்னார்.
இதனையடுத்து இரண்டாவது முறை மாலிவால் பதவி பிரமாணத்தை வாசித்தார். இந்த முறை அவர் எந்த முழக்கத்தையும் எழுப்பவில்லை. எனவே முதலில் செய்துக்கொள்ளப்பட்ட சத்தியப்பிரமாணம் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications