புறாவால் நடந்த அக்கப்போர்.. 'கோ ஏர்' விமான பயணிகள் அதிர்ச்சி
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற, 'கோ ஏர்' விமானத்தில் இரண்டு புறாக்கள் புகுந்து கொண்டு செய்த அக்கப்போர் இப்போது வைரலாகியுள்ளது.
விமானம் புறப்படுவதே இதனால், சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், விமானத்திற்குள் புறாக்கள் பறப்பதும், விமானத்தில் இருந்த பயணிகள் அதைப் படம் பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
இருப்பினும், புறா விமானத்தில் எவ்வாறு நுழைந்தது என்பது இதுவரை தெரியவில்லை. விமானத்தின் கதவைத் திறந்து புறாக்களை விமான ஊழியர்கள் வெளியேற்றினர். இதன்பிறகே விமானம் கிளம்பியது.
கோ ஏர் விமானத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: விமானம் திட்டமிடப்படி நேற்று மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டியது. ஆனால், புறா புகுந்ததால், தாமதம் ஏற்பட்டுவிட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளுக்கு ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால், அதற்கு, கோ ஏர் விமானம் வருத்தப்படுகிறது.
இனி இப்படி நடக்காமல் இருக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த இந்த விமானம் மாலை 6:45 மணிக்குதான் தரையிறங்கியது. ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்ற காமெடி டயலாக்கிற்கு ரொம்பவே பொருத்தமான சம்பவம்தான் இது.












Click it and Unblock the Notifications