ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்த இலங்கை.. தக்க நேரத்தில் இந்தியா அனுப்பிய உதவி! பொதுமக்கள் சற்றே நிம்மதி
டெல்லி: இலங்கை நாட்டில் மிக மோசமாக பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தக்க நேரத்தில் இந்தியா உதவி உள்ளது.
பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருக்கும் நாடு இலங்கை. கொரோனா பெருந்தொற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறையாகச் சுற்றுலாத் துறை உள்ளது. உலகெங்கும் சுற்றுலாத் துறை இன்னும் கூட மேம்படவில்லை
இத்துடன் வேளாண் துறையில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல சில காரணங்களும் சேர இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. இதனால் மற்ற நாடுகளிடம் இலங்கை உதவி கோரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை
இலங்கையின் ஜிடிபி மதிப்பு இப்போது மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மோசமாகச் சரிந்துள்ளது. அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 250 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால். சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40,000 டன் டீசல்
மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. ஏற்கனவே, இந்தியா 1 பில்லியன் டாலர் கடனுதவி அளிக்கும் என்று அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் தற்போது இலங்கை நாட்டை அடைந்துள்ளது. இந்த எரிபொருள் இன்று மாலைக்குள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நாட்டில் மோசமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா அனுப்பிய டீசல் இலங்கைக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசம்
சுமார் 2.2 கோடி மக்களைக் கொண்ட இலங்கை, சுதந்திரத்திற்குப் பிறகு கண்டிராத மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்து உள்ளது. அந்நிய செலாவணிக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை முழுவதும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்கனவே தனிநபர் போக்குவரத்தைத் தவிர்த்து பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தக்க நேரத்தில் உதவி
இருப்பினும் இப்போது பஸ் போன்ற பொது போக்குவரத்திற்கே டீசல் போட முடியாத அளவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பொது போக்குவரத்து இயங்கவில்லை. இன்று இந்தியா அனுப்பிய டீசல் சற்று காலதாமதமாகச் சென்று இருந்தாலும் கூட இலங்கை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து இருக்கும். இலங்கை நாட்டில் மோசமான நிலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா தக்க நேரத்தில் உதவி உள்ளது.
Recommended Video

அவசர நிலை
இலங்கையில் ஏற்பட்ட இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர். நிலைமை கை மீறிச் செல்வதை தவிர்க்க இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்ய அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications