இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்- தலைவர்கள் இரங்கல்!
டெல்லி: ஈழத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜா காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாவைசேனாதிராஜா உயிர் பிரிந்தது. அவரது மறைக்கு இலங்கை சிங்கள மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1942-ம் ஆண்டு பிறந்த மாவை சேனாதிராஜா, ஈழத் தமிழர்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். ஈழத் தமிழர்களின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணம் மாவட்ட மாவிட்டபுரத்தில் பிறந்து 1961-ம் ஆண்டு அரசியல் போராட்டங்களில் பங்கேற்று வந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் முதலில் பணியாற்றினார். பின்னர் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார்.

ஈழத் தமிழர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதால் சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு மொத்தம் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. 1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈபிஆர்எல்ப், டெலோ இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டார். ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் படுகொலைகளுக்குப் னர் அடுத்தடுத்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார்.2000-ம் ஆண்டு தேர்தலில் வென்றும் எம்பியானார்.
தமிழீழ விடுதலைப் புலிகளாள் அனைத்து ஈழத் தமிழர் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்றார். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டையும் ஏற்றார்.
2014-ம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக மாவை சேனாதிராஜா செயல்பட்டார்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் மாவை சேனாதிராஜா. அவரது மறைவுக்கு சிங்கள, மலையக, ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications