கொடுத்தது கொடுத்ததுதான்.. கச்சத்தீவை பற்றி பேசவே கூடாது.. இந்தியாவை மிரட்டும் இலங்கை அமைச்சர்கள்!
டெல்லி: தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை 50 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்துவிட்டது; இப்போது அதைப் பற்றி பேசுவதற்கு எந்த வித வாய்ப்புமே இல்லை என இலங்கை அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பிரச்சனையை திடீரென பாஜக எழுப்பி உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளை வைத்து இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார். இதனை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு விமர்சித்து வருகின்றனர்.

பாஜக, திமுக, காங்கிரஸ் நிலைப்பாடு: அதாவது கச்சத்தீவை அன்றைய காங்கிரஸ் அரசும் திமுக அரசும்தான் இலங்கைக்கு கொடுத்தது என்கிறது பாஜக. ஆனால் திமுக அரசின் எதிர்ப்பை மீறியே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது என்கிறது திமுக. காங்கிரஸோ கச்சத்தீவை கொடுத்துவிட்டு கன்னியாகுமரிக்கு அருகே உள்ள வெட்ஜ் பேங்க் எனும் கடல் வளம் மிக்க தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா பெற்றது என்கிறது காங்கிரஸ்.
இலங்கை அமைச்சர் அலி சப்ரி: இத்தகைய சூழ்நிலையில் கச்சத்தீவை பற்றி இந்தியா பேசவே கூடாது என இலங்கையின் அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர். இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி இது தொடர்பாக கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பற்றி மீண்டும் பேச வேண்டிய தேவையே இல்லை. இதற்காக ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படும் சூழ்நிலையும் இல்லை. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை. இவ்வாறு அலி சப்ரி தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா: இலங்கை மீன்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் கொலை வழக்கை எதிர்நோக்கி இருப்பவருமான டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது: 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு பகுதியில் இந்திய, இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை இருந்தது. ஆனால் 1976-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி அப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையே இல்லை. கச்சத்தீவு என்பது முடிந்து போன விவகாரம். இது தொடர்பாக இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டு மீனவர்களால் இலங்கை கடல்வளம் சூறையாடப்பட்டு வருகிறது. இதற்கான போராட்டங்களை இலங்கை தமிழ் மீனவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எதனையும் கேட்கவில்லை. அதுபற்றி பேசுவதற்கும் எந்த ஒரு அடிப்படை காரணமும் கிடையாது. இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications