டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்.. 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி!
டெல்லி: புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த பலரும் உடனடியாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறிவினர்கள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் ரயில்களிலும், பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்களிலும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

இரவு சரியாக 9.30 மணி. முகூர்த்த நாளான நாளை கும்பமேளாவில் புனித நீராட, பிரயாக்ராஜ் செல்வதற்காக பக்தர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்தனர். நடைமேடை 14 மற்றும் 15ல் பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில் வரும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரம் 9.45ஐ தாண்டுகிறது. ரயில் இன்னும் வந்து சேரவில்லை. இதற்கிடையில் மற்றொரு தகவல் வேகமாக பரவுகிறது. அதாவது கும்பமேளாவுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்று பேச்சு அடிப்படுகிறது.
ரயில்வே துறை அளித்த விளக்கத்தில், நடைமேடை 14ல் பிரக்யராஜ் எக்ஸ்பிரஸ் நின்றுக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சுதந்திர சேனை மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்காக நடைமேடை 12,13ல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்திருக்கின்றனர். அப்போதுதான் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஒரு வதந்தி பரப்பப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் நடைமேடை 14க் நோக்கி ஓடியுள்ளனர்.
அடித்து பிடித்துக்கொண்டு அங்கிருந்த பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளனர். இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்ததுள்ளதாக 'இந்தியா டுடே' செய்தியை வெளியிட்டிருக்கிறது. சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தவர்கள் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. India TV செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,
"எனது சகோதரி கூட்டதில் நசுக்கப்பட்டுவிட்டார். அவரது வாயிலிருந்து மஞ்சள் நிறத்தில் நுரை வந்தது. ஆள் சுயநினைவின்றி இருக்கிறாள். மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறோம். ஒன்றரை மணி நேரமாக அவளிடமிருந்து எந்த அசைவும் வரவில்லை. நாங்கள் படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டிருந்தோம். மக்கள் கூட்டம் எங்களை தள்ளிவிட்டு, முந்தியடித்துக்கொண்டு சென்றது" என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், "நானும் எனது மகளும் கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டோம். எங்கள் மீது பயணிகள் சிலர் விழுந்துவிட்டனர். எனது தலை மட்டும்தான் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் நெரிசலில் சிக்கிக்கொண்டது. போலீசார் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். ரயில் நிலையத்தில் ஒரு ஸ்டெச்சர் கூட இல்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கும்பமேளா நடக்கும் பிரக்யராஜ் வழியாக செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியிருந்தது. ஏசி பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் முந்தியடித்தனர். இதில் தமிழக பயணிகள் சிலர் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ரயில் பயணிகளிடையே ஏற்படும் நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், ரயில்கள் தவிர மற்ற போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
டெல்லி ரயில் நிலைய சம்பவம் குறித்து விளக்கமளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்னராக ஒரே மணி நேரத்தில் டெல்லி ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டரில் சுமார் 1000க்கும் அதிகமான முன்பதிவில்லாத டிக்கெட்கள் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications