அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் ரிட் மனு ஒன்று தக்கல் எய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மீறி வருகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், பயிற்சி உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபன்னா, எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி, ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்து வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதமானது என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போதைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் எதுவும் மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் இந்த மனுக்கள் தொடர்பாக இந்து அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications