தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத பிரதமர் மோடி- கொளுத்திப் போட்ட சு.சுவாமி
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் தர வேன்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது விவாதத்துக்குரியதாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் மாளிகை, தர்பார் மண்டபத்தில் இன்று (09.11.2022) காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டாக்டர் நீதிபதி தனன்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டரில் மோடி வாழ்த்து
புதிய தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை
நாட்டின் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். பிரதமர் மோடி தமது பதவி காலத்தில் எந்த ஒரு தலைலை நீதிபதியின் பதவி பிரமாண நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தது இல்லை.. முதல் முறையாக சந்திரசூட், பதவியேற்பில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

நெட்டிசன்கள் விமர்சனம்
அதேநேரத்தில், பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதது தொடர்பான சில யூகமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அதாவது பிரதமர் மோடியும் தலைமை நீதிபதி சந்திரசூட்டும் பெரும்பான்மையான விஷயங்களில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கலாம்; அல்லது
முழுமையாக முரண்பட்டவர்களாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சு.சுவாமியின் சர்ச்சை ட்வீட்
இந்த களேபரங்களில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தலையிட்டு ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் தர வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இமாச்சல பிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications