பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேச விரோதம்.. நிதியமைச்சக அறிவு திவாலாகிவிட்டது.. சு.சுவாமி கடும் தாக்கு
டெல்லி: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வு தேசவிரோதம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை கடந்த நான்கரை மாதங்களாக உயராத நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் குறைந்தால் குறையாத பெட்ரோல் டீசல் விலை, உயர்ந்தால் மட்டும் உயர்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாள்தோறும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டே வருகிறது.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு விலையும் ஒரு பக்கம் உயர்ந்து ரூ 1000 ஐ நெருங்கியுள்ளது. அது போல் சுங்கக் கட்டணம் விலையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் விலைகள், பால் விலை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மருந்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனாவால் பொருளாதார இழப்பு, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வரும் சாமானிய மக்கள் இந்த விலையேற்றங்களை சமாளிக்க முடியாமல் சிக்கித் திணறி வருகிறார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்ந்தது. இந்த 15 நாட்களில் 2 நாட்களை தவிர்த்து மற்ற 13 நாட்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலராக குறைந்த போதிலும் விலையுயர்வு இருக்கிறது.

ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் சூழல் உள்ளது. இப்படி செய்வது நிதியமைச்சகத்தின் அறிவு திவாலாகிவிட்டது என்பதையே காட்டுகிறது.

தேச விரோதம்
இது தேச விரோதமும் கூட. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அதன் மூலம் வரும் நிதியை கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையை போக்குவது என்பது முற்றிலும் மத்திய அரசின் திறமையின்மை என குறிப்பிட்டுள்ளது. இவரது கருத்துக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் சர்வதேச சந்தையில் விலையுயர்வால் எல்லா நாடுகளிலுமே இந்த விலையேற்றம் இருக்கிறது.

60 சதவீதம் வரி
இந்த எரிபொருட்களின் விலையை குறைக்க நீங்கள் ஏதாவது மேஜிக் வைத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில், வரிகளை நீக்க வேண்டும். விற்பனை விலையில் 60 சதவீதத்தை வரியாகவே எந்த நாடும் செலுத்தவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications