ஓய்வு பெறுகிறார் ஓ.பி.ராவத்.. தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்!
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இன்று இதை அறிவித்தது.
தற்போதைய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் சனிக்கிழமை நிறைவடைய உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை, சுனில் அரோரா பதவியேற்பார்.

62 வயதாகும் சுனில் அரோரா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக தகவல் தொடர்பு மற்றும் செய்தி விளம்பரத்துறை செயலாளராகவும், மத்திய அமைச்சகத்தின் திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
1980ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுனில் அரோரா, நிதித்துறை, ஜவுளித்துறை, திட்ட கமிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தலைமை தேர்தல் ஆணையர் அதிகபட்சமாக ஆறு வருடங்கள் அந்த பதவியில் நீடிக்க முடியும், அல்லது 65 வயது வரை பதவி வகிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில், சுனில் அரோரா, இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர முடியும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தால் தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர். ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications