இன்னும் 3 நாள் தான் கெடு.. தேர்தல் பத்திரம் முழு தகவலும் வெளியாகனும்! SBIக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான முழுதகவல்களையும் எஸ்பிஐ வழங்காததால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்தது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண் உள்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் எஸ்பிஐக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. எஸ்பிஐயில் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி தனி நபர்கள், நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினர்.

இந்த தேர்தல் பத்திர நன்கொடைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திரங்கள் செல்லாது. இதில் வெளிப்படைத்தன்மை தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களை இனி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை மார்ச் 6க்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும், இந்திய தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
இதையடுத்த தேர்தல் பத்திர விவரங்கள் வழங்க எஸ்பிஐ காலஅவகாசம் கோரியது. உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் கடந்த 12ம் தேதி எஸ்பிஐ சார்பில் தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த நிலையில் கடந்த 14ம் தேதி இணையதளத்தில் வெளியானது. அதில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விபரம் என்பது 337 பக்கங்களிலும், கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம் என்பது 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை செய்தனர் என்ற விவரம் தெரியாமல் போனது. இதனால் உச்சநீதிமன்றம் அதிருப்தியடைந்தது. இதையடுத்து வழக்கை மீண்டும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர எண்கள் உள்பட முழுவிபரத்தையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் எனக்கூறியதோடு தேர்தல் பத்திரம் எண்ணை வெளியிடாதது பற்றிய அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து மீண்டும் இன்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பாக ஏன் அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை என மீண்டும் சரமாரியாக கேள்வி கேட்டது. மேலும் ‛‛தேர்தல் பத்திரங்கள் சார்ந்த முழு விபரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து விவரங்களை வெளியிட நாங்கள் விரும்புகிறோம்.
ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களில் உள்ள தனி அடையாள எண்ணை (சீரியல்) கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து தகவல்களும் வெளியிட வேண்டும். எஸ்பிஐ என்பது நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். தேர்தல் பத்திர விவரங்களை தரச்சொன்னால் மட்டுமே நாங்கள் வழங்குவோம் என்ற மனப்பான்மையில் எஸ்பிஐ உள்ளது. இதனால் தேர்தல் பத்திரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினமே தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் '' என அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications