ஏன் இவ்வளவு தாமதம்.. ஈஷா அறக்கட்டளை வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன்? குறித்த காலத்திற்குள் அப்பீல் மனு தாக்கல் செய்வதை யார் தடுத்தது? யோகா ஒரு கல்வி நிறுவனம் கிடையாது என்று எப்படி கூறுகிறீர்கள்? என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021 ஆம் ஆன்டு நவம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மொத்தமுள்ள 4 லட்சத்து 88 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்புக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற ஈஷா அறக்கட்டளைக்கு உரிமை உள்ளது என்று கூறி நோட்டீசை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா அறக்கட்டளை வழக்கில் 2 ஆண்டுகள் அதாவது 637 நாட்களுக்கு பிறகு மேல் முறையீடு தாக்கல் செய்து இருக்கிறது.
காலதமாதமாக அப்பீல் செய்யப்பட்டுள்ளதன் நோக்கம் சந்தேகத்தை எழுப்புவதாக நீதிபதிகள் கூறினர். மேலும், குறித்த காலத்திற்குள் அப்பீல் மனு தாக்கல் செய்வதை யார் தடுத்தது? யோகா ஒரு கல்வி நிறுவனம் கிடையாது என்று எப்படி கூறுகிறீர்கள்? அவர்கள் திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றால் விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதை சவால் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் பதிலளித்தார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் இரு துறைகள் விவாதிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டன. ஈஷா அறக்கட்டளை சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் வாதிடுகையில், "20% கட்டிடத்தையும் 80% இயற்கை அம்சங்களுடன் யோகா மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த யோகா மையங்களில் சிறந்ததாக உள்ளது. சிவராத்திரி விழாவை ஒட்டி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு தரப்பிலும் இந்த வழக்கிற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications