Bihar SIR: "நிறைய கேள்விகள் உள்ளன.. தயாராக இருங்கள்.." தேர்தல் ஆணையத்திடம் திட்டவட்டமாக சொன்ன சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பீகார் சார் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில் சிபல் பல முக்கியமான வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து இதில் பல முக்கிய கேள்விகளைக் கேட்கவுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி தேர்தல் ஆணைய தரப்பிடம் கூறியுள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் அங்குத் தேர்தல் ஆணையம் சார் எனப்படும் சிறப்புத் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இந்த சார் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகச் சொல்லி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது.

65 லட்சம் வாக்காளர்கள்
அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் தெரிவித்தனர். வாக்காளர்கள் மிகப் பெரியளவில் நீக்கப்பட்டால் தலையிடுவோம் என்று சுப்ரீம் கோர்ட் முன்பு கூறியிருந்த நிலையில், அதை வழக்கறிஞர் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். தற்போது 65 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட 12 பேர் பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக கபில் சிபல் கூறினார். இதுபோல பல பிழைகள் இருப்பதாகவும் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இவை இருப்பதாகவும் கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்தார்.
பிழைகள்
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, "இந்தப் பிழைகள் இருப்பது வரைவு வாக்காளர் பட்டியலில் தான், இறுதி வாக்காளர்கள் பட்டியலில் இல்லை... இதுபோன்ற பணிகளில் சிறு பிழைகள் ஏற்படுவது இயல்பு தான். இந்தப் பிழைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) திருத்த முடியும். இறந்தவர்கள் என நீக்கப்பட்ட 12 பேர் உயிருடன் இருந்தால் அல்லது வாக்காளர் பட்டியலில் இருப்போர் இறந்ததற்கு எல்லாம் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை" என்றார்.
அதிகாரமே இல்லை
இதையடுத்து கபில் சிபல் தரப்பு, "ஒரு வாக்காளரின் குடியுரிமையை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் தான் இருக்கிறது. அது தனிப்பட்ட வாக்காளர்களின் பொறுப்பு இல்லை. 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி ஒருவர் வாக்காளரா இல்லையா என்பதைத் தேர்தல் ஆணையமே முடிவு செய்ய வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, எந்தவித ஆட்சேபணையும் எழுப்பப்படாத பட்சத்தில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆவணங்களைக் கோர முடியாது. வாக்காளர் பதிவு விதிகள் 1960இன் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை" என்றார்.
அதாவது பீகார் சார் நடவடிக்கையின் போது இந்தியக் குடிமக்கள் என்பதை வாக்காளர்கள் நிரூபிக்கக் குறிப்பிட்ட ஆவணங்களில் எதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்தே வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இருப்பினும், ஒருவர் ஆட்சேபணை தெரிவிக்காத போது ஒருவடையே ஆவணத்தைக் கோரும் அதிகாரமே தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பதே கபில் சிபல் வாதம்!
சுப்ரீம் கோர்ட்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் வகரங்களை அளித்தால், தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்க முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், வாக்காளர் பட்டியல் குறித்து நிறையக் கேள்விகள் கேட்க இருப்பதாகவும் அனைத்திற்கும் தயாராக இருக்கும்படியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications