"ஒரு நீதிபதி எப்படி இப்படி சொல்லலாம்? கொடுமை!” ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
டெல்லி: "ஒரு நீதிபதி எப்படி இது போன்ற கருத்தை சொல்ல முடியும்? இது கொடுமையானது" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்தை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
சிறார் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இளைஞர் மீதான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், "ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல" என்றும் தெரிவித்து இருந்தார்.
தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது, அதனை பிறருக்கு அனுப்புவதுதான் சட்டப்படி குற்றம் எனக் கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், "ஒரு நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்து கொடுமையானது" என தலைமை நீதிபதி சந்திர சூட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்பு பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியதுடன், தமிழக காவல்துறை பதிலளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications