மாநில அமைச்சரவை முடிவே இறுதியானது! வேறு முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் நறுக்
டெல்லி: தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஆளுநருக்கு இருப்பதாக கூறப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் அசைத்துப்பார்க்க தொடங்கியுள்ளது.
Recommended Video
பேரறிவாளவன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட உச்சநீதிமன்றம் ஆளுநரின் அதிகாரம் குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த அதிருப்திகள்தான் அவரது அதிகாரம் குறித்த விமர்சனங்கள் இன்னும் வலுவாக்கி இருக்கின்றன.

பேரறிவாளனை விடுவிப்பதே தீர்வு
பேரறிவாளன் தரப்பு கருத்தை கேட்ட நீதிபதிகள்,"பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் அவர் ஏன் சிக்க வேண்டும்? ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட கூடாது. அவரை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நாங்கள் நினைக்கிறோம்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு, தமிழக அரசு வாதம்
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும். இதை அரசியல் சாசன பிரிவு 72 மிகத்தெளிவாக கூறுகிறது." என தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், "மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை மத்திய அரசு ஆளுநரை கொண்டு தொடர்ந்து முடக்கிக்கொண்டே வருவது நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே சீர்குலைத்துவிடும்." என தமிழ்நாடு அரசு வாதிட்டது.

உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம், "அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில ஆளுநர் செயல்படுவார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாநில அமைச்சரவை எடுத்த முடிவுக்கு பதிலாக வேறு ஒரு முடிவை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து. மாநில அரசு பரிந்துரையையோ, முடிவையோ ஒப்புதலுக்கு அனுப்பி அது பிடித்தால் ஆளுநரே ஒப்புதல் தருவார், பிடிக்கவில்லை என்றால் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிடுவாரா? எதன் அடிப்படையில் ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்தார். " என அதிருப்தி தெரிவித்தது.

கருத்தில் முரண்படும் ஆளுநர்
"பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாகவே இருக்கிறது. இதனால் பலமுறை வழக்கை தேவையே இல்லாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பேரறிவாளன் விவகாரத்தில் மரண தண்டனை குறைக்கப்பட்டு இருக்கிறது. அது குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தற்போது சிறையில் இருந்து விடுவிப்பது என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது." என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.












Click it and Unblock the Notifications