அயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக சமரச குழு வழங்கிய அறிக்கை தொடர்பாக, உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, இந்து மற்றும் முஸ்லிம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று 40 ஆவது நாளாக நடைபெற்றது.

அதோடு. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததாகவும், தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட விசாரணை அமர்வு உத்தரவிட்டது.
நேற்றையதினம், இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த சமரச குழு தனது அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிபதிகள் முன்பாக சமர்ப்பித்தது. அறிக்கையின் அம்சங்கள், ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்றைய தினம் அந்த அறிக்கையை பரிசீலனை செய்கிறது. பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படாமல் ரகசியத்தை காக்கும் வகையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
முஸ்லிம் தரப்பான சன்னி வக்பு வாரியம், இந்த வழக்கில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளதாக சமரச குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று நேற்று தகவல்கள் வெளியாகின. இதை சன்னி வக்பு வாரியம் தரப்பு மறுத்து இருந்தது. எனவே சமரச குழு அறிக்கையில், எந்த மாதிரி அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இந்த அறிக்கை முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications