"சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து.." தேர்தல் அதிகாரி குற்றம் செய்துள்ளார்! உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சண்டிகரில் கடந்த மாதம் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதில், ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் களமிறக்கப்பட்டார்.

மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஆம் ஆத்மி வேட்பாளர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
சண்டிகர் மேயர் தேர்தல்: இந்த மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்த நிலையில், இந்தியா வேட்பாளருக்கு 20 வாக்குகள் கிடைத்த போதிலும் அதில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தச் சூழலில் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் வாக்குச்சீட்டில் மாற்றம் செய்வது போன்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கைத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில், கடந்த பிப். 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் காட்டமான கருத்துகளைக் கூறி இருந்தனர்.
உச்ச நீதிமன்றம்: தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகப் படுகொலைக்குச் சமமானது என்ற நீதிபதி, கேமராவைப் பார்த்த பிறகும் வாக்குச் சீட்டில் ஏதோ செய்வது வீடியோவில் தெளிவாகத் தெரிவதாகவும் கூறியது. மேலும், இந்த அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ்வால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்துக் குறியிட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வாக்குச்சீட்டைக் காட்டிய நீதிபதிகள் இந்த வாக்குச் சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
தேர்தல் முடிவு செல்லாது: இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதாவது சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்தலில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் வென்றதாக அறிவிக்கவே 8 வாக்குகள் செல்லாது என அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், மேயர் தேர்தலில் பதிவான 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அதிகாரியின் நடவடிக்கை காரணம் காட்டி தேர்தலைச் செல்லாது என அறிவிக்கத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. தனது அதிகார வரம்பை மீறித் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நேற்று நீதிமன்றத்திலேயே அவர் சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்துக் குறியிட்டதாகப் பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications