அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவு- டிகே சிவகுமாரை கதறவைத்த வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக இருந்த அமலாக்கத்துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
கர்நாடகா மாநிலத்தில் மட்டுமல்ல.. பிற மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்படும் போது அதை சமாளிக்க களமிறக்கப்படுபவர் தற்போதைய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். காங்கிரஸ் கட்சிக்கு பேரிடர் மீட்பு படைத் தலைவர் போல செயல்படுகிறவர் டிகே சிவகுமார்.

அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட போதும் காங்கிரஸ் மேலிடம் டிகே சிவகுமாரையே அனுப்பி வைத்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் உயிர் பெற்று ஆட்சியைக் கைப்பற்ற காரணமானவர்களில் டிகே சிவகுமாரும் ஒருவர்.
இப்படியான பின்னணி கொண்ட டிகே சிவகுமாரை 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை டார்கெட் செய்த்து. டிகே சிவகுமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் ரூ8.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில் டிகே சிவகுமார் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து. சிபிஐயும் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தது. 8 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சிவகுமார் ஜாமீனில் விடுதலையானார்.
இதனிடையே தம் மீதான சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார். அதேநேரத்தில் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தந்த அனுமதியை கர்நாடகா அரசு ரத்து செய்தது. தற்போது கர்நாடகா லோக் ஆயுக்தா இந்த வழக்கை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறையின் வழக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டிகே சிவகுமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது சிவகுமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தின் கீழ்தான் கிடைத்தது என்கிற ஆதாரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்யவில்லை; ஆகையால் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறையின் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்தது. இது டிகே சிவகுமார் தரப்புக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications