ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வேதாந்தா குழுமத்தின் சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வேதாந்தா குழுமத்தின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications