"ரூ.5 கோடி ஜீவனாம்சம், 3BHK சொகுசு வீடு!" 10 ஆண்டு நீடித்த விவாகரத்து போர் முடிவுக்கு வந்தது எப்படி?
டெல்லி: சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமண பிரச்சனையை, 'மகாபாரதப் போர்' போன்ற சட்டப் போராட்டம் என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்றம். "இந்தத் திருமண உறவு ஏற்கனவே செத்துவிட்டது" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பின் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தம்பதிக்கு விவாகரத்து வழங்கினர். மேலும், மனைவிக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் பொதுவாகவே விவாகரத்து வழக்குகள் குறைவாகவே உள்ளன. கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது முடிந்தவரை நமது நாட்டில் அதைப் பேசி தீர்க்கவே பார்ப்பார்கள். நிலைமை கையை மீறிச் செல்லும்போது மட்டுமே விவாகரத்து வழக்குப் போடுவார்கள். இதற்கிடையே பல நீதிமன்றங்களைத் தாண்டி சுப்ரீம் கோர்ட் வரை சென்ற விவாகரத்து வழக்கு ஒன்று குறித்து நாம் பார்க்கலாம்.

பின்னணி
இந்தத் தம்பதிக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், 2016ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.. அதன் பிறகு தொடங்கிய சட்டப் போராட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீடித்தது. மனைவியைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும், ஏன் அவரது வழக்கறிஞர்கள் மீது கூட கணவர் அடுக்கடுக்கான புகார்களை அளித்து வந்துள்ளார்.
மனைவி தரப்பு
வழக்கறிஞராக இருக்கும் அந்த கணவர், தன் மனைவிக்கு எதிராகச் சுமார் 80க்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பல்வேறு மேல்முறையீட்டைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணவர் தரப்பு குடும்ப நல நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், பராமரிப்பு தொகையையும் தொடர்ந்து வழங்க மறுப்பதாகவும் தனக்கு நிதி சிக்கல் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க குடும்ப பிஸ்னஸ்களில் இருந்து வேண்டும் என்றே விலகிவிட்டதாகத் தெரிவித்தார்.
கணவர் தரப்பு
கணவர் வழக்கறிஞர் என்பதால் அவரே நேரடியாக இந்த வழக்கில் ஆஜரானார். மனைவி தன் மீது ஏகப்பட்ட புகார்களைக் கொடுத்துள்ளதாகவும் இது தன்னை மன ரீதியாகத் துன்புறுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வேண்டும் என்றே குழந்தைகளை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாகக் கூறினார். இதுவரை பராமரிப்பு தொகையாக ரூ.45 லட்சம் செலுத்தியுள்ளதாகவும் இதற்கு மேல் தன்னால் தர முடியாது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், கணவர் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணவரின் இந்த அணுகுமுறையை 'பழிவாங்கும் போக்கு' என்று சாடிய நீதிமன்றம், இது ஒரு "திருமண மகாபாரத போர்" என்று குறிப்பிட்டது. இவ்வளவு நடந்த பிறகு மனைவியால் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது.
சிறப்பு அதிகாரம்
நமது நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கு எனத் தனியாக ஒரு சிறப்பு அதிகாரம் இருக்கிறது. அதுதான் "முழுமையான நீதியை" நிலைநாட்ட வழங்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 142. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தான் உச்ச நீதிமன்றம், தம்பதிக்கு இடையிலான திருமணத்தை ரத்து செய்ததுள்ளது.. மேலும், இரு தரப்பிலும் நிலுவையில் இருந்த அனைத்து சிவில், கிரிமினல் மற்றும் எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் ஒரே அடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
கணவர் தனக்கு வருமானம் இல்லை என்று வாதிட்ட போதிலும், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அந்த நபர் வேண்டும் என்றே தனது குடும்பத் தொழில்களில் இருந்து விலகி, திட்டமிட்டு ஒரு 'நிதிச் சிக்கல்' போன்ற மாயையை உருவாக்கியுள்ளார் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. தற்போதைய கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக ரூ. 5 கோடி தொகையை ஓராண்டிற்குள் வழங்க வேண்டும் என்று கணவருக்குக் கெடு விதித்துள்ளது.
அந்த மனைவி மும்பையில் முக்கியமான பகுதியில் 3 பெட்ரூம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அது மாமனாருக்கு சொந்தமானதாகும். ரூ.5 கோடியை கணவர் தரப்பு கொடுத்த பிறகு அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என மனைவி தரப்பிற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுக்கால "மகாபாரதப் போரை" தனது சிறப்பு அதிகாரத்தால் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்றம்!












Click it and Unblock the Notifications