போலி விளம்பர விவகாரம்! பதஞ்சலிக்கு எதிரான மருத்துவ சங்கத்தின் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பாரம்பரிய மருந்துகள் தொடர்பான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவச் சங்கம் தொடர்ந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், அதை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி முடித்து வைத்தது. வரும் காலங்களில் இதுபோன்ற விளம்பரங்களுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற அதன் இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
இந்தத் தீர்ப்பு ஆயுஷ் நிறுவனங்கள், மாநில அரசின் அதிகாரிகளின் முன் அனுமதியின்றித் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதா மீதான முந்தைய ஆய்வுகளையும், 1945 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ரூல்ஸின் விதி 170 நீக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தது. அதில் பதஞ்சலி நிறுவனம் தங்கள் தயாரிப்புகள் குறித்து உரிய ஆய்வுகள் டேட்டாக்களை வெளியிட்டதாகவும், நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தியதாகவும் மருத்துவச் சங்கம் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
முந்தைய விசாரணைகளில், தவறான தகவல்களை வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் விசாரணை நடந்தது. மேலும், பதஞ்சலியின் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடங்கப்பட்டன. பின்னர், அவர்கள் பொது மன்னிப்பு கோரியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
விதி 170
இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆயுஷ் அமைச்சகம் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளில் விதி 170-ஐ நீக்கிய நிலையில், இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த விதி, ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி மருந்துகள் தொடர்பான விளம்பரங்களுக்கு, மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறான டேட்டாவை தடுக்கும் வகையில், மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயமாக்கியது.
இருப்பினும், 2024 ஆகஸ்டில், உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு இந்த விதி நீக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் விளம்பரத்திற்கான ஒப்புதல் தேவை என்பது மீண்டும் தற்காலிகமாக நடைமுறைக்கு வந்தது.
சுப்ரீம் கோர்டில் வாதம்
சில மாநிலங்கள் விதி நீக்கப்பட்ட பின்னரும் விதி 170-ஐ அமல்படுத்துவதாக அமிகஸ் கியூரி ஷாதன் ஃபராசத் குறிப்பிட்டார். மத்திய அரசால் நீக்கப்பட்ட ஒரு விதியைச் செயல்படுத்துவதன் சட்டபூர்வமான தன்மை குறித்து நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இருப்பினும், விதி நீக்கத்தை எதிர்த்தவர்கள் இதனால் நுகர்வோருக்கு ஆபத்துகள் ஏற்படும் என வாதிட்டனர். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தற்போதுள்ள சட்டங்களும், சுய ஒழுங்குமுறையும் இந்த விதியைத் தேவையற்றதாக ஆக்குவதாக வாதிட்டார்.
ஆயுஷ் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் போது, அவற்றை விளம்பரம் செய்வது ஒரு வழக்கமான வணிக நடைமுறை தான் என்று நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், கூடுதலாக நீதித்துறை தலையீடு தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. மேலும், ஆகஸ்ட் 2024இல் விதி 170 நீக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ததுடன், இந்த மனுவையும் முடித்து வைத்தது. அதேநேரம் விதி 170 நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடரவும் அனுமதி வழங்கியது.












Click it and Unblock the Notifications