65 நாள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு மாறி மாறி 40 வழக்குகள் போட்ட தம்பதி! விவாகரத்து வழங்கிய உச்சநீதிமன்றம்
டெல்லி: வெறும் 65 நாட்கள் மட்டும் அந்தத் தம்பதி விவாகரத்து கேட்டுப் போராடி வருகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளை மாறி மாறி தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தம்பதியின் உறவு மீட்க முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்தியாவில் இப்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெறும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெறும் 65 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துவிட்டு, 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து கேட்டுப் போராடி வரும் தம்பதியின் வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல், மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. "அவர்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்" என்ற நீதிபதிகள், அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்தத் தம்பதிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு சமரசம் செய்ய முடியாத நிலைக்குப் போய்விட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தம்பதியினர் ஒன்றாக வாழ விரும்பவில்லை என்பதையும், உறவு மீட்க முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டது என்பதையும் இது தெளிவாக்குகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட கசப்புணர்வால் அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்று அமர்வு கூறியது.
65 நாட்கள் மட்டுமே
இந்தத் தம்பதிக்குக் கடந்த 2012 ஜனவரி 28ம் தேதி திருமணமாகியுள்ளது. இருவரும் 65 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி அந்தப் பெண் புகுந்த வீட்டை விட்டு வெளியேறினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்து வரும் அந்தத் தம்பதி, டெல்லி, அலகாபாத், காசியாபாத், லக்னோ எனப் பல நீதிமன்றங்களிலும் பல வழக்குகளைத் தொடுத்தனர்.
அந்த மனைவி, எந்தவித ஜீவனாம்ச கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. 142வது பிரிவின் கீழ் திருமணத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். நிலுவையிலுள்ள பல குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளையும் ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிடமிருந்து இந்த வழக்குகளின் நிலையைக் கேட்டறிந்தது..
எதிர்ப்பு
விசாரணையின்போது நேரில் ஆஜரான கணவர், விவாகரத்து கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். மனைவி தனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாகவும், நீதிமன்றங்களில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாகவும் வாதிட்டார். விவாகரத்துக்குத் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், மனைவி மீது பொய்ச் சாட்சி அளித்ததாகக் கூறி மனுக்களையும் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றம் கருத்து
இருப்பினும், கணவரின் ஆட்சேபணைகளை நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு திருமணம் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்ட நிலையில், ஒருவர் விவாகரத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள முடியாது எனத் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் மேலும், "அவர்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இளம் தம்பதியினர் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, அதற்கேற்பப் பழகுவதற்குச் சில காலம் தேவை.. 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கசப்புணர்வை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் ஒன்றாக வாழ்வது இப்போது சாத்தியமற்றது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதுபோன்ற குற்ற வழக்குகள் தம்பதிகள் மீண்டும் இணைய எஞ்சியிருக்கும் வாய்ப்பையும் இல்லாமல் செய்துவிடுவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்தது. மேலும், தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றங்களைப் போர்க்களமாக மாற்றும் தம்பதிகளை அனுமதிக்க முடியாது என்றது. சமரசத்தை முக்கியமான விஷயமாக முன்னிலைப்படுத்திய உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சம் அல்லது குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகளுக்காகத் தம்பதியினர் நீதிமன்றங்களை அல்லது காவல்துறை அதிகாரிகளை அணுகும் முன்பு மண உறவுத் தகராறுகளைத் தீர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றனர்.
விவாகரத்து
மனைவியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திருமணத்தை ரத்து செய்தது. தம்பதியினரின் மண உறவுத் தகராறால் எழும் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் முடித்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், பொய்ச் சாட்சி அளித்ததாகக் கூறப்படும் சில மனுக்கள் மட்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும், இரு தரப்பினரும் தங்கள் மண உறவுத் தகராறு தொடர்பான புதிய வழக்கையும் தொடரவும் தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications