"நீட் முறைகேடு வழக்கு!" ஐகோர்ட் விசாரணைக்கு தடை.. அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றம்
டெல்லி: இந்தாண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்குகள் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால், ஐகோர்ட்களில் இது குறித்து நடக்கும் விசாரணைகளுக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடந்து வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்தாலும் கூட மத்திய அரசு இந்தத் தேர்வைத் தொடர்ந்து நடத்தியே வருகிறது.

நீட் வழக்கு: அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு நடந்த நிலையில், தேர்வு முடிவுகள் முதலே இதில் குழப்பமே நிலவி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் பலரும் இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தனர். சுமார் 1500 பேருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில், அந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக நீட் தேர்வு முகமை கூறிவிட்டது.
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்துகளைக் கூறி வருகிறது. இந்தத் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தாலும் கூட அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டை தவிர்த்து ஏழு உயர் நீதிமன்றங்களிலும் நீட் முறைகேடு தொடர்பான வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தடை உத்தரவு: இதற்கிடையே ஏற்கனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால் உயர் நீதிமன்றங்களில் நடந்து வந்த நீட் வழக்குகளுக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழு உயர் நீதிமன்றங்களில் நடந்து வந்த நீட் தொடர்பான அனைத்து மனுக்களையும் இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டனர்.
நோட்டீஸ்: இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேலும், நீட் முறைகேடுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாகப் பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கும் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பி மத்திய அரசு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8ஆம் தேதி நடக்கும் நிலையில், அதற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
பல்வேறு மனுக்கள்: இப்போது மொத்தம் 14 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதில், 10 மனுக்களை 49 மாணவர்கள் மற்றும் 'ஸ்டூடன்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா' என்ற மாணவர் அமைப்பு தாக்கல் செய்தது. மீதமுள்ள நான்கு மனுக்கள் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்தவை. நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தனது மனுக்களில் கூறியிருந்தது. அதை ஏற்றே இப்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீட் கவுன்சிலிங் செயல்முறைக்குத் தடை விதிக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், நீட் கவுன்சிலிங் செயல்முறைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications