சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி
Recommended Video

டெல்லி: கட்டாய விடுப்பை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் 'காமன் காஸ்' அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக புகார் அளித்தார்.
அதன்பின்னர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இருவருக்கும் நடுவே மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு இயக்குனர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

வழக்கு தாக்கல்
குற்றச்சாட்டு, ஆரம்ப நிலையில் இருக்கும் போதே, கட்டாய விடுமுறை கொடுக்கப்பட்டது தவறு என்று வர்மா வழக்கறிஞர் சார்பில் நேற்று வாதம் முன்வைக்கப்பட்டது. பணி செய்ய விடாமல் தடுத்தல் முக்கிய வழக்குகளின் விசாரணை பாதிக்கும், இது சிபிஐயின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் செயல் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதேபோல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் 'காமன் காஸ்' அமைப்பும் மனு தாக்கல் செய்தது. வாதங்களை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

கட்டாய விடுப்பு ரத்து இல்லை
இதன்படி இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அலோக் வர்மா மனுவை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார். அதேநேரம், கட்டாய விடுப்பை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலோக் வர்மா மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது என்று, மத்திய அரசு தரப்பு முன் வைத்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார் என்பதால், கட்டாய விடுப்பை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி
அதேநேரம், அலோக் வர்மா மீதான புகாரை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.பட்நாயக், மேற்பார்வையில் மத்திய விஜிலென்ஸ் அமைப்பு (CVC) நடத்த வேண்டும். 14 நாட்களுக்குள் இந்த விசாரணை நிறைவு செய்யப்பட வேண்டும். சிபிஐ பொறுப்பு இயக்குநராக இப்போது நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ், வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமே தவிர, கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க கூடாது.

எதிர்பார்த்தது
சிபிஐயில் நடந்த பணியிடமாற்ற உத்தரவுகளை சீலிட்ட கவரில், நவம்பர் 12ம் தேதி அடுத்த விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அலோக் வர்மா எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கவில்லை என்றபோதிலும், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதும், ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில், விசாரணை நடத்தப்பட உத்தரவிட்டுள்ளதும் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் வாய்ப்புள்ளது.

சிபிஐ விளக்கம்
இதனிடையே சிபிஐ பொறுப்பு இயக்குநராக மத்திய அமைச்சரவை குழுவால் நியமிக்கப்பட்ட நாகேஸ்வரராவின் நியமனம் தற்காலிகமானதுதான் என்றும் அலோக் வர்மா சிபிஐ இயக்குநராகவும், ராஜேஷ் அஸ்தானா சிறப்பு இயக்குநராகவும் நீடிப்பதாகவும் சிபிஐ நேற்று விளக்கம் அளித்துள்ளது. வழக்குக்கு அஞ்சி திடீரென இந்த விளக்கத்தை சிபிஐ வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வர்மா மற்றும் அஸ்தானா மீதான புகார்கள் குறித்து விசாரித்து முடியும் வரை நாகேஸ்வரராவ் பொறுப்பு இயக்குநராக தொடருவார் என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications