சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. முக்கிய வழக்கு விசாரணை ரத்து.. பரபரப்பு!
டெல்லி : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் குடும்பத்தினருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் வெகுவாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் அனிருத்தா போஸ், எஸ் ரவீந்திர பட், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் குடும்பத்தினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதி சூர்யா காந்த் குணமடைந்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சில் ஒருவராக நீதிபதி ரவீந்திர பட் கடந்த வியாழக்கிழமை வரை விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அவருடன் அமர்வில் இருந்த மற்ற 4 நீதிபதிகளுக்கு தற்போது ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரே பாலின திருமண வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தொடர்ந்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ரவீந்திர பட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த அமர்வின் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தேங்குவதை தவிர்க்கும் நோக்கில், புதிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications