வன்னியர் உள்ஒதுக்கீடு.. இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி : வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. அத்துடன் வழக்கில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்கள் முன்பு நிறைவேற்றியது.
இந்த சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு (68 ஜாதியினர்) 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பிறசாதியினர்) 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
ஆனால் வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார், உச்சநீதிமன்றத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு , வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர்.