காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு
டெல்லி: நாடு முழுக்க ஆங்காங்கே காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அடிக்கடி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், இந்தியாவை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

தீவிரவாத தாக்குதல்
இந்தநிலையில், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த தற்கொலைப் படை தீவிர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, அதிரடி காட்டிய ராணுவம், தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளை 100 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

ஆதரவு கருத்து
அதே நேரம், காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றது. இதற்கிடையே, சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை காஷ்மீரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களது வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் ஆக வைத்திருந்தனர். சிலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆதரவு கருத்துகளையும் பதிவிட்டனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்
அந்த வகையில், பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தாஹீர் ஷசாத் லத்தீஃப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் அளித்த புகாரின் அப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டான். அதே போல், மகாராஷ்டிர மாநிலத்தில் விடுதியில் தங்கி, கல்லுாரிகளில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது, சிவசேனா கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அப்பாவி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தநிலையில், ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி தாரிக் ஆதீர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஷ்மீர் மாணவர்களை துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், மேகாலயா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 10 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஷ்மீரை சேர்ந்த மாணவர்களுக்கு நாடு முழுக்க உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications