"லிவ் இன் உறவு முறிவதை.. பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது!" உச்ச நீதிமன்றம் சொன்ன முக்கிய கருத்து
டெல்லி: நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், தனது பாட்னர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இருப்பினும், லிவ் இன் உறவு முறிந்து போவதால் மட்டும் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுக்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். மேலும், அந்த பெண் வேண்டும் என்றால் பராமரிப்பு தொகையை மட்டும் கோரலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த காலத்தில் லிவ் இன் உறவுகளில் வாழும் இளம் தலைமுறையினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதில் பிரச்சனை வரும்போது, அது சட்ட ரீதியாக மிகப் பெரிய தலைவலியைக் கொடுப்பதாக மாறுகிறது. இதற்கிடையே லிவ்- இன் உறவுகள் தொடர்பாகவும் அதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
அதாவது வாழ்க்கைத் துணையைப் பிரிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்றும் லிவ்-இன் உறவில் இருந்து ஒரு நபர் பிரிந்து செல்வது மட்டுமே கிரிமினல் குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம், மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது. திருமணப் பந்தம் இல்லாத உறவுகளில் இருக்கும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி நீதிபதி பி.வி. நாகரத்னா, லிவ் இன் உறவுகள் தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் தொடர்ந்த வழக்கை விசாரித்த போதே உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்துகளை முன்வைத்தது.
பின்னணி
மனுதாரரான அந்தப் பெண், 18 வயதில் ஒருவரைச் சந்தித்துள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் வாழ்ந்ததாகவும், தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபருக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது எனக் கூறி, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அந்தப் பெண் அளித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா, பல ஆண்டுகளாக ஒருவருடன் இணைந்து வாழ்ந்து, குழந்தை பெற்ற பிறகு, உறவு முறியும்போது அதைப் பாலியல் வன்கொடுமை என்று சொல்வதை ஏற்க முடியாது என்றார்.. வழக்கு விசாரணையில் நீதிபதி, "இருவரும் சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் இருக்கும்போது, அங்கு பாலியல் குற்றத்திற்கான இடம் எங்கே இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
விசித்திரம்
அவர் மேலும், "லிவ்-இன் உறவுகளில் இதுதான் நடக்கிறது. பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்கிறார்கள்; உறவு முறியும்போது, பெண் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்கிறார். இது திருமணத்திற்கு வெளியே இருக்கும் உறவுகளின் விசித்திரமான போக்கு.. இந்த உறவு முறையற்றதாக இருக்கலாம் (Illegitimate relationship), ஆனால் அந்த உறவில் பிறந்த குழந்தை ஒருபோதும் முறையற்றதாகாது. ஒருவேளை அவர்கள் திருமணம் செய்திருந்தால், அந்தப் பெண்ணின் உரிமைகள் இன்னும் வலுவாக இருந்திருக்கும்" என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
வழக்கு விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு அனுதாபம் தெரிவித்த நீதிபதி, அவர் தனது குழந்தையின் பராமரிப்புக்காக சட்டப்படி Maintenance கோரலாம் என்றும் ஆனால் ஒரு நபர் உறவிலிருந்து விலகிச் செல்வதை மட்டும் கிரிமினல் குற்றமாக மாற்ற முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இரு தரப்பினரும் இந்தப் பிரச்சனையை மத்தியஸ்தம் மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கவனம் தேவை
சம்மதத்துடன் கூடிய லிவ்-இன் உறவுகளுக்கும், திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றும் குற்றங்களுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை இந்தத் தீர்ப்பு கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது சட்ட ரீதியான பார்வையில் சம்மதத்துடன் கூடிய உறவை பாலியல் குற்றமாகக் கருத முடியாது என்பதையே நீதிபதி கூறியிருக்கிறார். இந்த காலத்தில் லிவ் இன் உறவுகள் அதிகரித்து வருகிறது. அது இருவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும் கூட நமது நாட்டில் லிவ் இன் உறவுகளுக்கு இன்னும் சட்டப்பூர்வ பாதுகாப்பு முழுமையாக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.!














Click it and Unblock the Notifications