தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள்.. தடுப்பது எப்படி? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தல் சமயத்தில் விலையில்லா திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உ.பி. செல்வாரா?
பொதுநல வழக்கு
அஷ்வினி குமாா் உபாத்யாய என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ''தோ்தல் வரும்போது வாக்காளா்களை கவர்வதற்காக, இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இந்த இலவச அறிவிப்புகள் அரசியல் சாசன நடைமுறைகளையும் கடுமையாக பாதிக்கிறது.
தேர்தல்
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும், இதை அனைத்து கட்சிகளும் செய்துவருகின்றன. ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க, இலவச வாக்குறுதிகள் கொடுப்பது தவிா்க்கப்பட வேண்டும். தோ்தலுக்கு முன்பு, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். மாநில கட்சியாக அங்கீகாரம் அளிப்பதற்கான தோ்தல் சின்ன ஒதுக்கீடு உத்தரவு 1968-ல் இந்தத் திட்டத்தையும் சேர்த்து தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இலவசம்
நாட்டின் பொது நிதியில் இருந்து இலவசங்களை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிப்பது, வாக்களிப்பவர்களின் சமநிலையை பாதிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட பிரிவு 14, 162, 266(3) ஆகியவற்றை இந்த நடைமுறை மீறுகிறது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலில், அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என ஒரு கட்சி அறிவிக்கிறது, மற்றொரு கட்சி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிவிக்கிறது.
வாக்குறுதி
பஞ்சாப் மாநிலத்தில், அந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கொடுக்கவே நிதி இல்லாமல் இருக்கிறது. ஏற்கெனவே அந்த மாநிலத்துக்கு 77 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. ஆனால் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்காக ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகள் பஞ்சாபில் உள்ள கட்சிகளால் அளிக்கப்பட்டிருக்கின்றன. கடனோடு கடனாக கட்சிகளால் இலவசங்களை எப்படி தர முடியும்'' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம்
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.