ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு- ஆளுநர் அதிகாரம்-12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஆளுநர்களின் அதிகாரம் குறித்த இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டங்களை எழுப்பி கேள்விகளையும் முன்வைத்திருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீர்ப்புக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதில் மத்திய அரசுக்கு 12 கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
ஒரு மாநில சட்டசபை மசோதாவை நிறைவேற்றுகிறது; இதனை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறார்.. இதன் பின்னர் மாநில அரசானது மசோதாவை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?
ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு எந்த வகையான மசோதாக்களை அனுப்ப முடியும்? மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா? அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா?
மாநில சட்டசபைகளின் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக் கேட்டு ஆளுநர் நடக்க வேண்டுமா? அல்லது ஆளுநர் என்பவர் தன்னிச்சையாக செயல்பட்டுக் கொள்ள முடியுமா?
ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம் என்றால் என்ன? அரசியல் சாசனத்தின் 111,200 பிரிவுகளில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?
ஒரு மாநில அரசு நிறைவேற்றி அனுப்புகிற மசோதா மீது குறிப்பிட காலத்துக்குள் ஆளுநர் தெரிவித்தாக வேண்டும் என கெடு விதிக்க இயலுமா?
மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் 4 வகையான முடிவுகள் எடுக்க அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு அதிகாரம் தந்துள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications