"திருமணத்திற்கு பின்பு 81,000 ஆண்கள் தற்கொலை.. ஏதோ தப்பா இருக்கு!" சுப்ரீம் கோர்டில் ஷாக் தகவல்
டெல்லி: குடும்ப வன்முறைகள் காரணமாகத் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை என்பது இப்போது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. குடும்ப வன்முறை காரணமாகப் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே குடும்ப வன்முறைக்கு ஆளான திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களைக் குறிப்பிட்ட சுப்ரீம் கோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஆண்களுக்கான தேசிய ஆணையத்தை உருவாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

திருமணமான ஆண்கள்: 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட மரணங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த காலகட்டத்தில் 1.64 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 81,063 திருமணமான ஆண்கள் என்றும் 28,680 திருமணமான பெண்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அந்த மனுவில், "2021ஆம் ஆண்டில் 33.2 சதவிகித ஆண்கள் குடும்பப் பிரச்சனைகளாலும், 4.8 சதவிகிதத்தினர் திருமணம் தொடர்பான பிரச்சனைகளாலும் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் மொத்தம் 1,18,979 ஆண்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது ஒட்டுமொத்த தற்கொலையில் 72 சதவிகிதம் ஆகும். இதே காலகட்டத்தில் 45,026 பெண்கள், அதாவது சுமார் 27 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை: திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினையைக் கையாளவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் புகார்களை ஏற்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை அனைத்து போலீஸ் நிலையமும் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. குடும்ப வன்முறை அல்லது குடும்பப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பரிந்துரை செய்யவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தேசிய ஆண்கள் ஆணையம்: மேலும், இப்போது மகளிருக்குத் தேசிய பெண்கள் ஆணையம் இருக்கும் நிலையில், அதேபோல ஆண்கள் குறிப்பாகத் திருமணமான ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து விசாரிக்கத் தேசிய ஆண்கள் ஆணையத்தையும் உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்விடம் வந்த நிலையில், அதை விசாரிக்க மறுத்துவிட்டது. இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "நீங்கள் ஒருதலைபட்சமாக சில விஷயங்களைச் சித்தரிக்க முயல்கிறீர்கள். புதிதாகத் திருமணமான பெண்கள் குறித்த தகவல்களைக் கொடுக்க முடியுமா? இங்கு யாரும் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தனிப்பட்ட காரணங்களால் தான் இந்த நடக்கக் கூடாத சம்பவங்கள் நடக்கிறது" என்றார்.
மேலும், இது போன்ற வழக்குகளை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமான கருத்துகளைத் தெரிவித்த நிலையில், மனுதாரர் அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.












Click it and Unblock the Notifications