மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பிரதமர் மோடியை விமர்சித்தார் வினோத் துவா என்று சிம்லா போலீசில் பாஜக பிரமுகர் அஜய் ஷ்யாம் புகார் கொடுத்தார். பயங்கரவாத தாக்குதல்கள், மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி என்று யூ டியூப் ஷோவில் வினோத் துவா பேசினார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இதற்கு எதிராகத்தான் போலீசில் வினோத் துவா மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து வினோத் துவா மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி வினோத் துவா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான சிறப்பு ஞாயிற்றுக்கிழமை பெஞ்ச் இன்று விசாரித்தது.
விசாரித்த உச்சநீதிமன்றம், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. ஆனால் வினோத் துவா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் மத்திய அரசும் இமாச்சல பிரதேச அரசும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications