"இந்தியா" பெயரில் கூட்டணியா.. தப்பு, தப்பு.. உச்சநீதிமன்றம் போன வழக்கு.. தீர்ப்பு என்ன தெரியுமா?
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு 'இந்தியா' (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பாட்னா மற்றும் பெங்களூரில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி' என்ற பெயருக்குப் பதிலாக 'INDIA' என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா எனும் இந்த பெயர் சுருக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விளம்பர நோக்கத்துக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் ஊடக நிறுவனங்களுக்கு நேர்காணல்களை வழங்கியிக்கலாம் என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சியினர் தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது, இந்தியாவுக்கு எதிராக பாஜக போராடும் என்று பொதுமக்கள் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என வாதம் வைக்கப்பட்டது.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம் இதுபோன்ற ஓர் உணர்வை எதிர்க்கட்சிகள் உட்புகுத்தி மக்களை குழப்பும் முயற்சி எனவும், எதிர்க்கட்சிகளின் இந்த செயல் அரசியல் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக தேசத்தின் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்றும் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, "இதற்காக மக்கள் நேரத்தை வீணடிப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த மனுவை விசாரிக்க முடியாது. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கு செல்லுங்கள். இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளதால் தலையிட முடியாது' எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மனுதார் தெரிவித்தார். அதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விளம்பரத்துக்காக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications