மாவோயிஸ்டுகள் தொடர்பு: பேரா. சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு வைத்திருந்த வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியார் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான மகாராஷ்டிரா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை விசாரிக்க உள்ளது.
டெல்லி பல்கலைக் கழக பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபா, 2014-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பில் சாய்பாபா இருந்தார் என்பது குற்றச்சாட்டு. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவராக இருந்த ஹேம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாய்பாபாவுக்காக மாவோயிஸ்டுகளுடன் தாம் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறியிருந்தாராம். அதன் அடிப்படையில் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.
டெல்லி பேராசிரியர் சாய்பாவுடன் பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்டோரில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இந்த வழக்கில் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரோ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விடுதலை செய்து உத்தரவிட்டது. 8 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைத்தது.
5 வருட சிறைக்கு பின்.. உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என் சாய்பாபா விடுதலை
ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பிறப்பித்த சாய்பாபா உள்ளிட்டோரை விடுதலை செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உடனடியாக உச்சநீதிமன்றத்தை மகாராஷ்டிரா அரசு அணுகியது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலைக்கு தடை விதிக்கவும் மறுத்தது. அதேநேரத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யலாம்; அந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை 11 மணிக்கு விசாரிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.