வென்றால் ஓகே.. தோற்றால் மட்டும் இவிஎம் காரணமா? வாக்குச்சீட்டு கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்
டெல்லி: நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், ‛‛நீங்கள் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக உள்ளது. தோல்வியடைந்தால் இயந்திரம் மோசமானது என்று கூறுவீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியது.
நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பாஜக வெல்லும்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி வருகின்றன. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்டணி படுதோல்வியடைந்தது. இதையடுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கிளப்பி வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான் தங்களின் தோல்விக்கு காரணம். பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது என்று கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மல்லிகார்ஜூன கார்கே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம். வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் இன்று உச்சநீதிமன்றத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. அதாவது கேஏ பால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‛‛நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், பிபி வராலே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கேஏ பால் சார்பில், ‛‛நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 180 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் சர்வதேச அமைதி அமைப்பின் தலைவராக இருக்கிறேன். அனாதைகள், விதவைகள் உள்ளிட்டவர்களை மீட்டுள்ளேன்’’ என்றார்.
இதை கேட்ட நீதிமன்றம் , ‛‛சரி இருக்கட்டும். நீங்கள் அப்படி இருக்கும்போது அரசியல் விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?’’ என்ற கேள்வியை எழுப்பியது. அதற்கு அவர், ‛‛இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. நான் எந்த கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. 155 நாடுகளுக்கு நான் பயணித்துள்ளேன். பெரும்பாலான நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறை தான் உள்ளது. சர்வாதிகார நாடுகள் தவிர பிற நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறை தான் உள்ளது.
தேர்தலின்போது பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, 19, 21 ஆகியவை மீறப்படுகின்றன. இன்று அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல அரசியல்கட்சி தலைவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார்.
இதை கேட்ட நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியானது. தோல்வியடைந்தால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மோசம் என்று சொல்வீர்களா? என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுதவிர, ‛‛வாக்குச்சீட்டு முறையில் இருக்கும் பலவீனம் நன்கு அறியப்பட்டுள்ளது. அதுபற்றிய முழுவிபரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை கவனிக்கும்போது நடைமுறையில் சீர்த்திருத்தங்கள் தேவை. இதுபோன்ற சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் நல்லதாக இருக்கும்’’ என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications