திருப்பதிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மனு.. உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி.. வழக்கும் அதிரடியாக தள்ளுபடி
டெல்லி: திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வாடிகன் நகரம் தனி நாடாக இருப்பது போல திருப்பதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதற்கு நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும். எனவே மத்திய அரசை அணுகுங்கள் எனக் கூறி உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அதாவது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான இந்துக்களின் புனித தலமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. அந்த கோயிலின் லட்டு பிரசாரம், இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது.
இந்த புனிதத்தை சீர்குலைக்கும் விதமாக, லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திருப்பதி கோயில் விவகாரத்தில் அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையில், திருப்பதி - திருமலை அடங்கிய ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக உருவாக்க வேண்டும் எனவும் அப்படி செய்தால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் திருப்பதி வந்துவிடும் என்பதால் அரசியல் தலையீடு இருக்காது" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவய், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திருப்பதியில் 30 லட்சம் பேருக்காக எப்படி தனி மாநிலம் உருவாக்க உத்தரவிட முடியும்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வாடிகன் நகரத்தை மேற்கோள் காட்டினார்.
வாடிகன் நகரம் தனி நாடாக இருப்பது போல திருப்பதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதற்கு நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும். எனவே மத்திய அரசை அணுகுங்கள் எனக் கூறி பொது நலமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications