தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. மனு அதிரடி தள்ளுபடி
டெல்லி: கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் மீண்டும் வென்ற திமுகவின் தயாநிதி மாறனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதன்மூலமாக தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய தயாநிதி மாறன் மீண்டும் வென்றார். தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்எல் ரவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தயாநிதி மாறனை எதிர்த்து எம்எல் ரவி போட்டியிட்டு தோல்வியடைந்து இருந்தார். இந்நிலையில் தான் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
‛‛தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17-ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற அன்று பத்திரிகை வாயிலாக தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்டுகளுக்கு செலவிட்ட தொகை போன்றவற்றை முறையாக தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் அனுமதித்த ரூ. 95 லட்சத்தைவிட, தயாநிதி மாறன் அதிகமாக செலவிட்டார். இதன் காரணமாக தயாநிதி மாறன் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி என் ஆனந்த் வெங்கேடஷ் அமர்வு விசாரணை நடத்தியது. தயாநிதி மாறன் சார்பில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து "தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை" எனக் கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன்மூலம் தயாநிதி மாறனின் வெற்றி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்எல் ரவி சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபூல் பஞ்சோலி அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்ததோடு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தார். இதன்மூலமாக சென்னை மத்திய தொகுதியில் கடந்த 2024ம் ஆண்டில் தயாநிதி மாறன் வென்றது செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications