நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் குற்றமே- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பேசுவதற்கு, ராஜ்யசபா தேர்தல் உள்ளிட்டவைகளில் வாக்களிப்பதற்கு உறுப்பினர்கள் (எம்பி, எம்எல்ஏக்கள்) லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்; அத்தகைய உறுப்பினர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

2012-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. சீதா சோரன், வாக்களிக்க லஞ்சம் வாங்கினார் என்பது வழக்கு. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர் சிபு சோரனின் மருமகள்தான் சீதா சோரன். சிபு சோரனின் மகன்களில் ஒருவரான மறைந்த துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். இந்த வழக்கில் சீதா சோரன் 7 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், சீதா சோரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய மறுத்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அப்துல் நாசீர், சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் 3:2 என்ற அடிப்படையில் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. இதனையடுத்து அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு சிபிஐ மேல்முறையீட்டு மனு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச்தான் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது. இந்த வழக்கின் விசாரணையில் சீதா சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதாக வாதிட்டது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய பிவி நரசிம்ராவ்/ சிபிஐ வழக்கில் நீதிபதி அகர்வால், எம்பி,எம்எல்ஏக்கள் பேச, வாக்களிக்க லஞ்சம் பெற்றாலும் 105(2)-ன் கீழ் சட்ட பாதுகாப்பு தரமுடியும் என அளித்த தீர்ப்பையும் ராஜூ ராமச்சந்திரன் சுட்டிககட்டி வாதாடினார்.
இந்த வழக்கில்தான் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- 1998-ல் உச்சநீதிமன்றம் அளித்த, நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெறும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு தர முடியும் என்கிற தீர்ப்பை ரத்து செய்கிறது (பிவி நரசிம்மராவ் வழக்கு).
- 7 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம்.
- அரசியல் சாசனத்தின் 105 (2) , 194 (2) பிரிவுகள் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களான எம்பி, எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத்தான் செய்கிறது. ஆனால் நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்களான எம்பி, எம்எல்ஏக்களுக்கு இது பொருந்தாது.
- நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெறுவது என்பது குற்றம்தான்.
- நாடாளுமன்றம், சட்டசபைகளில் பேசுவதற்கும் வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெறுகிற எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்தது.
நரசிம்மராவ் வழக்கும் தீர்ப்பும்: 1998-ல் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் பதவி வகித்த போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்பிக்கள், மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கில் 1998ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் ஒரு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், எம்பி- எம்எல்ஏக்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பைத்தான் தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications