தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு EX தலைமை தேர்தல் ஆணையர் வரவேற்பு
தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரோஷி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அறிவுறுத்தல் படிதான் ஜனாதிபதி நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் உயரிய அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் சட்ட சபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்களை தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது.
இத்தகைய அதிகாரம் மிக்க தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு சார்பாக நடத்தப்படுவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் சந்தேகம்
சமீபத்தில் கூட சிவசேனா விவகாரத்தில் கட்சியின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்தும் உரிமை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அளிக்கப்பட்டது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த உத்தவ் தாக்கரே தேர்தல் ஆனையத்தை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அடிமை என்று கூட சாடியிருந்தார். இப்படி அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுக்கள் தொடர்ந்து வருகின்றனர்.

குடியரசுத்தலைவர் நியமனம்
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோரை கொண்ட 5 பேர் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று முன் தினம் அதிரடி தீர்ப்பினை அளித்தது. அதில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய 3 பேரைக் கொண்ட குழுவின் ஆலோசனை பேரில் குடியரசுத்தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நியாயமானதாக இருக்க வேண்டும்
தேர்தல் ஆணையர் விவகாரத்தில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் வரையில் இந்த முறை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் எதிர்க்கட்சித்தலைவர் இல்லையென்றால் எதிர்க்கட்சிகளில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற வேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தல் சந்தேகத்திற்கு இடமின்றி நியாயமானதாக இருக்க வேண்டும். அதன் தூய்மை பேணப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையம் வசம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுதந்திரமான, நியாயமான பங்களிப்பு
தேர்தல் ஆணையம் அரசியல் சாசன கட்டமைப்புக்கும், சட்டத்துக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும். அது நேர்மையற்ற முறையில் செயல்பட முடியாது. தனது செயல்பாட்டில் சுதந்திரமான, நியாயமான பங்களிப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்யாவிட்டால், ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் சட்டத்தின் ஆட்சியின் முறிவுக்கு அது உத்தரவாதம் அளிப்பதாக அமைந்து விடும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் முக்கிய அம்சமாக கூறியது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

நம்பகத்தன்மையை அதிகரிக்கும்
இந்த நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷியும், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் கொலிஜியம் முறையை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சி.ஒய் குரோஷி கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பூர்த்தி செய்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம்
பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் முறை வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்து வந்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நீதிபதி தார்குண்டே குழு 1975, தினேஷ் கோஸ்வாமி குழு 1990, இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் குழு ஜனவரி 2007 , மற்றும் சட்ட ஆணையம் கடந்த 2015 ஆம் ஆண்டு விடுத்த அறிக்கைகளில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல்தான்.

நியமன முறையில் சீர்திருத்தம்
எனவே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை மிக மிக அவசியமானது. எனவே, தற்போது நியமன முறையில் கொண்டு வரப்படும் சீர்திருத்தம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை, தன்னாட்சி, இன்ஸ்டியூடிஷனல் ஒருங்கிணைப்பு ஆகியவை பாதுகாக்கப்படும். விரிவான ஆலோசனை எதுவும் இன்றி தேர்தல் ஆணையர்களை நிர்வாக குழு (அமைச்சரவை) நியமிக்கும் நடைமுறை உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை நான் நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். பெரும்பாலான நாடுகளில் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிப்பது மட்டும் இன்றி பாராளுமன்ற ஒப்புதலும் பெறப்படுகிறது.

மக்களின் நம்பிக்கைக்கு உட்பட்டதாக
பெரும்பாலான நாடுகளிடம் பின்பற்றப்படும் இந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நான் கூட இந்த குறைபாடுகள் கொண்ட நடைமுறையின் மூலமே தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட எனது நியமனத்திற்கு எதிர்க்கட்சித்தலைவரும் கையெழுத்திட்டு இருந்தால் நான் இன்னும் வலுவானாக உணர்ந்து இருப்பேன். தற்போதைய புதிய முறை பெரிய அளவில் நம்பகத்தன்மையும் பாராபட்சமற்ற தன்மையையும் கொண்டு வருவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்றதாக மட்டும் இன்றி பொதுமக்களின் நம்பிக்கைக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

உரிய தீர்வை கொடுக்கவில்லை
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சில முக்கிய பிரச்சினைகளை தீர்வு காணவில்லை. தலைமை தேர்தல் ஆணையருக்கு அரசியல் அமைப்பு கொடுத்துள்ள பாதுகாப்பை போன்று தேர்தல் ஆணையர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கும் பாதுகாப்பை கொடுக்கவில்லை. இதுபோன்ற மேலும் சில முக்கிய விவகாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் உரிய தீர்வை கொடுக்கவில்லை. எனவே, மீதமுள்ள விவகாரங்களும் விரிவான சட்டங்கள் மூலம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்க்கப்படும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications