Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவிபேட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக்கோரிய வழக்கு.. தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தலின்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேட்டின் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

நம்நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஜுன் 1ல் கடைசி கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Supreme Court seeks complete report cross-verification of votes cast on EVM with paper slips generated through the VVPAT system

இந்தியாவை பொறுத்தவரை தேர்தல்களில் இவிஎம் எனும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மத்தியில் ஆளும் பாஜக முறைகேடு செய்வதாகவும் தெரிவித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தான் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் எனும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது நாம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு அளிக்கும்போது அடுத்த சில வினாடிகளில் விவிபேட் இயந்திரத்தில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது தொடர்பான ஒப்புகை சீட் வரும். இதன்மூலம் நாம் விரும்பியோருக்கு அளித்த வாக்கு பதிவாகி உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் தான் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‛‛ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் சார்பில், ‛‛தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்’’ எனக்கூறி மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் இன்னும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஒப்புகை சீட்டு இயந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்தபோது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதனை உள்ளிருந்து பல்பு எரிந்தால் மட்டுமே தெரியும் வகையிலான கண்ணாடியாக மாற்றி விட்டார்கள். தற்போது ஒப்புகைச்சீட்டு உள்ளே விழுகிறதா இல்லையா என்பது கூட வாக்காளர்களுக்கு தெரிவது இல்லை. பல ஐரோப்பிய நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பி விட்டனர்'' என வாதம் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி இருந்தார். அவர் வாதாடும்போது, ‛‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மெமரி கார்டு புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபேட்டிலும் மெமரி கார்டு உள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டனர். ஜெர்மனி நீதிமன்றம் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்ப முடியாது என கூறியுள்ளது. எனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தின் மக்கள்தொகை ஜெர்மனியை விட அதிகமாக உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் வழிமுறை என்பது இங்கு வேலைக்கு ஆகாது. ஆனாலும் நாம் மக்களின் நம்பிக்கையை பெற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.

இந்த வேளையில் நீதிமன்றம் நியாயமான தேர்தல் தொடர்பாக மனுதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கு பிரசாரந்த் பூஷண், ‛‛அதற்கு 100 சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும். 2017ல் விவிபேட்டில் ஒப்புகை சீட்டை பார்க்கும் வகையில் கண்ணாடி இருந்தது. தற்போது இந்த கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஒப்புகை சீட்டு வருவதை பார்க்கும் வகையிலான கண்ணாடி கொண்டு வர வேண்டும். ஒரு சட்டசபை தொகுதியில் 5 இயந்திரங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. இது வெறும் 1 சதவீதத்துக்கும் குறைவு. இதனை 50 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்'' என கூறப்பட்டது.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனாலும் எதிர்காலத்தில் இத்தகைய உறுதியை தரமுடியாது. ஒரு தொகுதியில் 200 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும்போது 2 சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றது. இதை 100 சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்களின் இயக்குனர்கள் பாஜகவில் இருக்கின்றனர். இதனால் நம்பகத்தன்மையில் கேள்விக்குறி உள்ளது'' என வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகள் பற்றியும் விரிவான தகவலை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+