ஐஏஎஸ் பயிற்சி மையமா? கொலைக் களமா? 3 பேர் பலியான விவகாரத்தில் லெஃப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்றின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்து 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி பழைய ராஜிந்திர் நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த 27-ம் தேதி மாலை பெய்த கனமழை காரணமாக இப்பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர். தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ரேயா யாதவ், கேரளாவை சேர்ந்த நவீன் டெல்வின் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 பேர் பலியான சம்பவம் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கை கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டுமான விதிமீறல் தொடர்பான 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்தது.
இந்நிலையில், 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனவுகளுடன் வந்த மாணவர்களின் வாழ்க்கையுடன் பயிற்சி மையங்கள் விளையாடுகின்றன. பயிற்சி மையங்கள் மரண அறைகளாக, கொலைக் களங்களாக மாறிவிட்டன" என்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள், பயிற்சி மையத்தில் வெள்ளத்தால் பலியான நிகழ்வு எச்சரிக்கை மணியை அடித்திருப்பதாகவும், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயிற்சி மையங்கள் கொலை களங்களாக மாறிவிட்டன. நேரடி வகுப்புகள் நடத்த முறையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்திக்கொள்ளட்டும். நீங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தேசிய தலைநகரில் நடந்த இந்தச் சம்பவம் அனைவரின் கண்களையும் திறக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கூறியது. "இந்த சம்பவம் ஒரு கண் திறக்கும் நிகழ்வு, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத வரை எந்த நிறுவனமும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், டெல்லியில் மட்டும் நூற்றுக்கணக்கான மையங்கள் செயல்படும் நிலையில், அதற்கென விதிகள் ஏதும் வகுக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். மேலும், என்ஓசி இல்லை என்பதால் பயிற்சி மையங்களை மூட வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுத்த பயிற்சி மையங்களின் கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications