ராஜீவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கான 142-வது பிரிவு-சண்டிகர் மேயர் கேஸில் உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 தமிழரை விடுதலை செய்வதற்கு உச்சநீதிமன்றம் பயன்படுத்திய அரசியல் சாசனப் பிரிவுதான் 142. உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்ட அரிதினும் அரிதாக பயன்படுத்தும் 142-வது பிரிவைத்தான் தற்போது சண்டிகர் மேயர் தேர்தலிலும் கையில் எடுத்து ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி பெற்றவர் என அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அரசியல் சாசனத்தின்142-வது பிரிவு என்பது உச்சநீதிமன்றத்துக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கக் கூடியது. அரசியல் சாசனத்தின் மாநில அரசுக்கு 161-வது பிரிவு முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது. அதுபோலவே உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் தரக் கூடியதுதான் 142-வது பிரிவு.

நீதிக்கான பிரிவு: உச்சநீதிமன்றமானது வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு நிச்சயம் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது; நீதி கிடைத்தாக வேண்டும்; நீதி எந்த வகையிலுமே தடைபடக் கூடாது என முடிவு செய்தால் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தலாம். பொதுவாக உச்சநீதிமன்றம் அரிதினும் அரிதாகவே இந்த பிரிவை பயன்படுத்தும்.
ராஜீவ் வழக்கில் 6 தமிழர் விடுதலை: அண்மையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர்கள் விடுதலைக்கு இந்த 142-வது பிரிவு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி இருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டார். அதே வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோரினர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 142-வது பிரிவை கையில் எடுத்து 6 தமிழர்களையும் விடுதலை செய்தது. இதனடிப்படையில் நளினி உள்ளிட்ட 6 தமிழரும் சிறைக் கொட்டடியில் இருந்து விடுதலையாகினர்.
சண்டிகர் மேயர் தேர்தல்: தற்போது இதே 142-வது பிரிவை சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பயன்படுத்தி உள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக- இந்தியா கூட்டணி (காங்கிரஸ், ஆம் அத்மி) இடையே போட்டி நிலவியது. சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்ற 8 வாக்குகளை வேண்டும் என்றே செல்லாது என தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்ததுடன் பாஜக வேட்பாளர்தான் வெற்றி பெற்றவர் என அறிவித்தார்.
ஜனநாயகப் படுகொலை: இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரி, வேண்டும் என்றே ஆம் ஆத்மி வேட்பாளர்களை செல்லாததாக்கும் வகையில் வாக்கு சீட்டில் ஏதோ கிறுக்குவது வீடியோக்களில் பதிவாகி வெளியாகி இருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த முதல் நாளே, அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என கொந்தளித்தது.
வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்: இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்திய அதிகாரிகளை கடந்த 2 நாட்களாக உச்சநீதிமன்றத்துக்கு வரவழைத்து கேள்விகளால் வெளுத்தெடுத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். மேலும் தேர்தல் அதிகாரியின் வாக்குச் சீட்டு தில்லு முல்லு வீடியோக்களையும் இதுவரை இல்லாத வகையில் நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகளும் பார்த்தனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு: இறுதியாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை -அதாவது உச்சநீதிமன்றத்துக்கு அரசியல் சாசனம் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்றதாகவே பிரகடனம் செய்தனர் நீதிபதிகள். நீதியை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் 142-வது பிரிவை கையில் எடுத்து நீதி பரிபாலனத்தை நிலைநிறுத்தியிருப்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications