உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கச்சேரி.. அதிமுக பொதுக் குழு வழக்கில் நாளை விசாரணை!
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரிந்துள்ளன. சென்னை வானகத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்; அத்துடன் ஜூலை 11-ல் ந் தேதி இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது; அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தோம். ஆனால் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த திருத்தங்களை பதிவேற்றம் செய்யவில்லை. ஆகையால் இந்த பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது; ஆகையால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் வைரமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்று பொதுக்குழு வழக்கு விசாரணை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 12-ந் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அலுவல் நேரம் முடிவடைந்ததால் இந்த வழக்கு விசாரணை நாளை டிசம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்பு ஒரு கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த மனுவில் ஓ பன்னீர் செல்வத்தின் மனு மிகவும் அற்பமானது. கட்சி விதிகளை மீறிய ஓ பன்னீர் செல்வம் நிவாரணம் பெற தகுதியற்றவர் என காட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக, சட்டவிரோதமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். அதிமுகவை பிரதிநிதித்துவப்படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் எதுவும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications