ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை போல நளினி, ரவிச்சந்திரன் விடுதலை? உச்சநீதிமன்றத்தில் நாளை க்ளைமாக்ஸ்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. பின்னர் 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தமிழக அரசு முடிவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு எந்த முடிவும் எடுக்கக் கூடாது; மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு என வாதிடப்பட்டது. இத்பனால் 7 தமிழர் விடுதலை என்பது முட்டுக்கட்டையானது

பேரறிவாளனின் தொடர்ந்த வழக்கு
அதேநேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ந் தேதி அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இது மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்பட்டது.

நளினி, ரவிச்சந்திரன் வழக்கு
பேரறிவாளனை விடுதலை செய்த இத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசு பதில் மனு
இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில், 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு, 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி கிடப்பில் போட்டிருப்பது உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பேரறிவாளனைப் போல நளினி, ரவிச்சந்திரன் இருவரும் நாளை விடுதலை செய்யப்படுவார்களா? என்பது நாளை தெரியவரும்.











Click it and Unblock the Notifications