நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள 5 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பேரறிவாளன் பாணியில்... இடைக்கால ஜாமீன், விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்!
தமிழக அரசு பதில்
அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்கட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டனர். இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார்.
ஆளுநர் காலம் தாழ்த்தினார்
அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
தமிழக அரசு கட்டுப்படும்
எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும். குறிப்பாக, ஆளுநர் தனது தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் எடுக்கும் முடிவில் ஒருசில காரணத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை ஒத்திவைப்பு
இதனிடையே நளினி, ரவிசந்திரன் ஆகியோரை தொடர்ந்து ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் என 5 பேரும் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நளினி, ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பேரும் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி பி.ஆர். காவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 5 பேரின் விடுதலை தொடர்பான வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.