SIR-க்கு எதிர்ப்பு.. திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - உத்தரவு
டெல்லி: பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் SIR எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கடந்த 4ம் தேதி இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மனு தொடர்பாக மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகாரில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இது அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பொதுமக்கள் தங்களின் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழகத்தில் SIR நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை கோரியும் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தன்னிச்சையானது. குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் வக்கீல் பி சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வக்கீல் பி ஸ்ரீராம் மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா சார்பில் வக்கீல் தேவ்யானி குப்தா, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா சார்பில் வக்கீல் ராதா ஷ்யாம் ஜனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் வக்கீல் பிரசன்னா ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் மனுதாரர்களுக்கும் மனு தொடர்பான ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. பிறகு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications