சிவசேனா சின்னம் , பெயர் ஒதுக்கீடுக்கு எதிரான உத்தவ் தாக்கரே கோஷ்டி மனு- உச்சநீதிமன்றம் நாளை விசாரணை!
டெல்லி: சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் ஆகியவற்றை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், திடீரென முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அத்துடன் பாஜக ஆட்சி அமைக்கவும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த சிவசேனா கட்சி பெயர், சின்னம் அத்தனைக்கும் ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரியது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் முந்தைய உத்தவ் தாகக்ரே அரசானது, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாகரிடம் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை 90 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைய இருக்கிறது. அப்படி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் முதவ்லர் பதவியை ஷிண்டே பறி கொடுக்கும் நிலைமை ஏற்படும். இந்நிலையில் சிவசேனா கட்சி, சின்னம் பெயர் தொடர்பான உத்தவ் தாக்கரே மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications