"நாட்டில் யாரையும் பாதுகாக்க வேண்டாம் என கூறுகிறீர்களா?" மணிப்பூர் விவகாரம்! சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில காலமாகவே மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த மே முதல் வாரத்தில் தொடங்கிய வன்முறை, தொடர்ந்து வருகிறது.
வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இணையச் சேவையும் முடக்கப்பட்டது. இருந்த போதிலும் வன்முறை தொடர்ந்தே வந்தது. இதனால் மாநிலத்தில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோசமான சம்பவத்தின் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அதில் மணிப்பூர் மாநிலத்தில் இருக்கும் இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த வாரம் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அங்கு நடக்கும் சம்பவங்கள் மொத்தமும் அரசியலமைப்பு தோல்வி அடைந்ததைக் காட்டுவதாகக் கடுமையான கருத்துகளைக் கூறியிருந்தனர்.
அங்குப் பெண்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டுக் கொண்டார். மேலும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது இந்த வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் விசாரித்தது. மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் என்றும் மணிப்பூரில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பல பெண்கள் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், புகார் அளிக்கவில்லை என்றாலும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணையின் போது வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், அதற்குத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் , "மற்ற இடங்களில் நடந்துள்ள என்று கூறி மணிப்பூர் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாப் பகுதிகளிலும் நடக்கின்றன என்று சொல்வதால் எந்தப் பலனும் இல்லை.
தலைமை நீதிபதி கேள்வி: மணிப்பூரில் நடந்ததை போன்ற குற்றங்கள் நாடு முழுக்க நடக்கிறது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மணிப்பூர் விவகாரத்தை நாம் எவ்வாறு கையாள்வது என்பதே இங்கே கேள்வி.. இந்தியாவின் அனைத்து மகள்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு தாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications